Thursday, July 15, 2010

பெருமாள் திருமொழி

திவ்ய பிரபந்த பாசுரம் - குலசேகர ஆழ்வார் ராமனைக் குழந்தையாக பாவித்து தாலாட்டாக பாடியது:

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!

கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!

ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!

தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!

தாலேலோ

கண்ணே, கண்மணியே
கையமுதே தாலேலோ
பண்ணே, பாடுங்குயிலே
பால்நிலவே தாலேலோ

மயிலே, மாங்கனியே
மரகதமே தாலேலோ
குயிலே, குலக்கொழுந்தே
குண்டுமணியே தாலேலோ.

தேனே, திருவிளக்கே
தீஞ்சுவையே தாலேலோ
மானே, மருக்கொழுந்தே
மாதவமே தாலேலோ.

Sunday, August 3, 2008

ஆராரோ நீ ஆரோ அருமையான கொளந்தை யாரோ

மாப்பிள்ள வந்தா மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
பொண்ணப் பெத்த அப்பா வந்தா ஓட்ட வண்டியிலே

காக்கா கடி கடிச்சுக் குடுத்த கம்மருக்கட்டு முட்டாயி
சோக்கா வாங்கித் தின்னுபுட்டு விட்டாளையா கொட்டாவி
ஓட்டாஞ்சல்லிய எடுத்துக்கிட்டு ஓடினாங்க மாருக்கெட்டு
ஒராழாக்கு அரிசி வாங்கி ஒலையில தான் போட்டுக்கிட்டு
கூட்டாஞ்சோறு ஆக்கிகிட்டு கும்மாளந்தான் போட்டுகிட்டு
கொளவிக்கல்லு புள்ளய ஒண்ண குஷியாகப் பெததுகிட்டு
ஆராரோ நீ ஆரோ அருமையான கொளந்தை யாரோ

Sunday, July 27, 2008

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாத்தான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

திங்க உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேண்டுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா
அப்போ கலகலன்னு சிரிச்சுகிட்டு என்னைப் பாரம்மா

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

கோவம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சு குஞ்சு முடம் ஆகிவிடாது
உனக்கு கொய்யாப்பழம் பறிச்சுத் தரேன் அழுகக் கூடாது

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

Sunday, July 20, 2008

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்

அன்னையை பிள்ளை, பிள்ளையை அன்னை அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்பின் இயக்கம் பண்பின் முழக்கம் அம்மா என்றொரு சொல்லிலுண்டு
பத்துத்திங்கள் மடி சுமப்பாள் பிள்ளை பெற்றதும் துன்பத்தை மறப்பாள்
பத்தியம் இருந்து காப்பாள் தன் ரத்தத்தை பாலாக்கி கொடுப்பாள்

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்

இயற்கை கொடுக்கும் செல்வங்கள் எல்லாம் பொதுவாய் வைத்திட வேண்டும்
இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும் பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்
ஒருவருக்காக மழை இல்லை ஒருவருக்காக நிலவில்லை
வருவதெல்லாம் அனைவருக்கும் வகுத்தே வைத்தால் வழக்கில்லை

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்

மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு விழிகள் ஆகும் என்று
உணரும் போதுஉனக்கும் எனக்கும் நன்மை என்றும் உண்டு
வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும் வகுத்து வைப்பது பாவம்
கருணை கொண்ட மனிதர் எல்லாம் கடவுளின் வடிவம் ஆகும்

அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்

Sunday, July 13, 2008

ஆயிரம் காலம் நான்

தாலேலோ தாலேலோ
ஆயிரம் காலம் நான் அரசுக்கு நீர் வார்த்தேன்
தொண்ணுறு காலம் நான் துளசிக்கு நீர் வார்த்தேன்
எண்ணூறு காலம் நான் எருதுக்கு நீர் வார்த்தேன்
என்னரசு கண் வளர நான் நான் என்ன தவம் செய்தேனோ?

காஞ்சி நகர் தனிலே காமாட்சி கோவிலிலே
சன்னதியில் நிற்கையிலே சாமி ரெண்டு கையாலே
சாமி ரெண்டு கையாலே எனக்கு தந்த திரவியமோ
தாலேலோ தாலேலோ

Friday, July 11, 2008

காக்கா காக்கா மை கொண்டா

காக்கா காக்கா மை கொண்டா
காடை குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சை கிளியே பழம் கொண்டா

உத்தம ராஜா என் கண்ணு
பத்தரை மாத்து பசும் பொண்ணு
உள்ளம் மயங்கிட வந்திடுங்க
உடனே எல்லாம் தந்திடுங்க

காக்கா காக்கா மை கொண்டா

கல்லை கையால் தொட மாட்டான்
தொல்லை எதுவும் தர மாட்டான்
சொல்லால் செயலால் உங்களுக்கே
நல்லதை என்றும் செய்திடுவான்
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சை கிளியே பழம் கொண்டா

காக்கா காக்கா மை கொண்டா

சாப்பிட உங்களை கூப்பிடுவான்
சமர்த்தாய் அவனும் நடந்திடுவான்
தோப்பில் துரவில் தூங்காமல்
துடுக்காய் ஓடி வந்திடுங்க
காக்கா காக்கா மை கொண்டா